வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்-கனடா-
உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்குமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் நீதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும் கனேடியப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் மாற்றமில்லை-ஐரோப்பிய ஒன்றியம்-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கு ஏலவே ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே, அதனடிப்படையில் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விசாரணை பொறிமுறை குறித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போல் கோட்ப்ரே தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்-எம்.கே.சிவாஜிலிங்கம்-
தமிழினப் படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் கடந்த 1983ல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டதாக 53 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில், இன்றையதினம் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றுகாலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியபின், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஓர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென இதன்போது குறிப்பிட்ட அவர், அதனை வெற்றிகொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க….. Read more