முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில், மாங்குளம் நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று , மீண்டும் முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளையில், மாங்குளம் நோக்கி வருகை தந்த ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.