அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் 7 நாட்களுக்குள் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்பிற்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன் அவ்வாறு அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20வது திருத்தம் 7 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இருப்பினும் யாரேனும் குறித்த காலப்பகுதியில் 20வது திருத்தத்திற்கு சவால் விடுவாராயின், உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் தனது முடிவை வழங்க வேண்டும். குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின் 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் 2வது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். 2ம் வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின் செயற்குழு கூட்டத்தின்போது 20வது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். பின் மூன்றாவது வாசிப்பின் போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது.