மலர்வு – 06.05.1953
உதிர்வு – 02.01.1982
‘புதியபாதை’ ஊடாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய சிந்தனையை தந்த ஈழத்தின் ‘சே’, தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) அவர்களின் 41வது நினைவுதினம் இன்றாகும்.

1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா பதிப்பகத்தில் வைத்து அரங்கேற்றப்பட்ட, தேசிய விடுதலைப் போரின் முதல் சகோதரப் படுகொலை மேற்கொள்ளப்பட்ட நாளும் இன்றாகும்.
தமிழீழத்திற்கான போராட்டத்தினை ஆயுதப் போராட்டமாக முன் நகர்த்திய முதன்மைப் போராளிகளில் ஒருவர். பத்திரிகை துறையூடாக புதிய புரட்சிகர சிந்தனையை ஊட்டி ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு பொதுவுடமை கொள்கையையும், புரட்சிகர போதனைகளையும் புதியபாதை என்ற சிறந்த விடுதலைப் பத்திரிகை ஊடாக ஊட்டிய சிறந்த ஊடகவியலாளர்.
எப்போதும் பொதுவுடமை கொள்கை மீது ஈடுபாடு கொண்டிருந்த தோழர் சுந்தரம், வடக்கு, கிழக்கு எல்லைகளை கடந்து மலையகத்தில் வாழும் மக்களின் விடுதலை மீதும் கரிசனை கொண்டு அவ் மக்களின் அடிமை வாழ்விற்கு எதிராகவும் ஆழமான கருத்துக்களை கொண்டிருந்தவர்.
ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார வெறியினால் மூன்றாம் உலக நாடுகள் எவ்வாறு சுறண்டப்படுகின்றன என்பதை தெளிவாகவே எடுத்து கூறிய சிறந்த விடுதலை இயக்கப் போராளி.
கடந்த நாற்பதாண்டு காலகட்டத்தில் தோழர் சுந்தரம் போன்ற ஒரு சிறந்த ஊடகவியலாளரையோ, பொதுவுடமைவாதியையோ, சிறந்த தளபதியையோ காணமுடியாத நிலையில், அன்று அத்தகைய அனைத்து தகைமைகளையும் கொண்ட தளபதியாக, கடும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் பணியாற்றிய அவரது கருத்துக்களும், எண்ணங்களும் பல ஆயிரக்கணக்கான பொதுவுடமைவாதிகளை, சக தோழர்கள் மத்தியில் உருவாக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற புரட்சிகர விடுதலை அமைப்பை தோற்றுவித்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், கழகத்தின் முதல் படைத்தளபதியாகவும் செயற்பட்டு வந்தவர். செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் என்ற மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியுடன் கைகோர்த்து மக்கள் போராட்டத்தை முன்நகர்த்திய சிறப்பான போராளியும் ஆவார்.
கட்சியின் இராணுவக் கட்டமைப்பை படைத் தளபதியாக முன்னெடுக்கும் அதேநேரத்தில் புரட்சிகர சிந்தனையை எழுதுகோல் மூலமும் எடுத்துக்கூறிய தலைவனாகவும் செயற்பட்டார். கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்கும் நோக்குடன் ஆனைக்கோட்டை காவல் நிலையத்தை தாக்கியழித்து எதிரியின் ஆயுதங்களைக் கைப்பற்றுவதன் மூலம் கழகத்தின் இராணுவ பிரிவுக்கு வலிமை சேர்த்த தளபதியும் ஆவார்.
எந் நாளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நினைவுகூரப்பட வேண்டிய தேசிய விடுதலைப் போராளி தோழர் சுந்தரம் ஆவார்.