உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியால் நேற்று (03) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 02 வருடங்களுக்குள் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காகவே மக்கள் ஆணை வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அந்த மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பட எவ்விதத்திலும் தயார் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கலந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் செயற்குழு கூட்டத்தில் மாத்திரம்  கலந்துகொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனை விடுத்து, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எந்தவொரு செயற்பாட்டிலும் தாம் ஈடுபடப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களில் 40% புதுமுகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.