அரசியல் நோக்கங்களுக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சுயாதீன குழுக்களிடமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி தி லிவேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் சிறுவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் அது சிறுவர் துஷ்பிரயோகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக 1929 என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்குமாறும் அதிகாரசபையின் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.