வவுனியா மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக 142 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவித்த வவுனியா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான ஐ. எம். ஹனீபா, இம்முறை இடம்பெயர்ந்த வாக்களார்கள் எவரும் இல்லையெனவும் கூறினார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வவுனியா மாவட்டத்தில் 1 இலட்சத்தி 17 ஆயிரத்து 333 வாக்காளர்களுக்காக 142 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளனனெவும் அதற்கான வேலைத்திட்டங்கள் முனெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும் கூறினார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் வாக்காளர்களின் எண்ணிக்கை 5,038 எனத் தெரிவித்த அவர், இதில் 4,140 விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 750 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், இதில் 147 வாக்குகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் அந்தந்த திணைக்களங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.

அத்துடன், தேர்தல் கால முறைப்பாடுகளாக, 14 முறைப்பாடுகள் இதுவரை பதிவிடப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.