Header image alt text

மீசாலை, கந்தசுவாமி ஆலய கட்டிட நிதிக்கான வைபவம்-

20131020_162704 20131020_162903 DSC_0508 DSC_0509 DSC_0512 DSC_0515 DSC_0516

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு காட்டுவளவு கந்தசுவாமி கோயிலின் கட்டிட நிதிக்காக இன்று அதிஸ்டலாப சீட்டு குலுக்கப்பட்டு 9 வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. காட்டுவளவு கந்தசுவாமி ஆலய பரிபாலன சபைத் தலைவர் வதனதீசன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. மேற்படி கோயிலின் கட்டிட நிதிக்கான அதிஸ்டலாப சீட்டிழுப்பு நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த சீட்டிலுப்பின் முதலாவது பரிசுக்கான வெற்றியாளரையும் தேர்ந்தெடுத்தார். இங்கு உரையாற்றிய காட்டுவளவு கந்தசுவாமி கோயில் பரிபாலனசபை தலைவர் வே.வதனதீசன் அவர்கள், இந்தக் கோயிலின் கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ளன. இந்த வேலைகளை செய்து முடிப்பதற்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுகின்றது. எனவே இதற்கு அனைவரின் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம். மக்கள் இயன்ற உதவிகளை செய்வதற்கு முன்வந்தால் இக்கோயிலின் கட்டிட வேலைகளை விரைவில் நிறைவுசெய்ய முடியுமென்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் குலைத்துவிட முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-

கூட்டமைப்புக்குள் அங்கம் பெறும் கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டதை ஆட்சேபித்தே எமது அதிருப்திகளை தெரிவித்து வந்திருக்கின்றோமே தவிர எச்சந்தர்ப்பத்திலும் எக்காரணங்களுக்காகவும் அதன் ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம் என புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்தேறிய இழுபறி நிலை பற்றியும் முரண் சார் நிகழ்வு பற்றியும் விளக்கமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், Read more

வைசர் அமரர். வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் நினைவுப் பேருரை-

untitled-1 untitled-11 z21ss3யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபர் வைசர் அமரர். வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 17ஆவது நினைவுப் பேருரை கந்தையா உபாத்தியாயர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் இ.ஈஸ்வரதாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது வட மாகாணக் கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வைசர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் மகனும், வைத்தியக் கலாநிதியுமான சி.சிவானந்தராஜா, புளொட் தலைவரும், வட மகாhணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றியிருந்தனர்.

பொதுநலவாய நாடுகள் குறித்து சந்தேகம்-

அரசாங்கம் எதிர்பார்ப்பதை போல இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தமுடியும் என தாம் நம்பவில்லை என்று புதிய இடதுசாரிகளின் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாநாட்டை புறக்கணித்தால், இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றி இருந்தால், இந்நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்திய பிரதமர் இந்த மாநாட்டில் சமூகமளிக்காமை, இந்த மாநாட்டை பாதிக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக தபால் சேவை ஆரம்பம்-

புதிதாக அதிவேக தபால் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் 24 மணித்தியாலங்களுக்குள் பொருட்கள் மற்றும் கடிதங்களை அனுப்பிவைக்க முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வேன்களை பயன்படுத்தவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.ஏ.ஜி. விக்ரமசிங்க கூறியுள்ளார். புதிய அதிவேக தபால் சேவை நவம்பர் மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிவேக தபாலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்களின் எடை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தளம் – மன்னார் வீதியில் வெள்ளம்-

கடும் மழையால் புத்தளம் – மன்னார் வீதியின் சில பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புத்தளம் மன்னார் வீதியின் எழுவான்குளம் பகுதியில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேர்ணல் ஆர்.ஏ.கே.ரணவீர தெரிவித்துள்ளார். இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடும் மழையை அடுத்து எழுவான்குளம் பகுதியின் வீதி நீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.சி.எம்.ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு பிரஜைகள் மீது தாக்குதல்-

அம்பாறை அறுகம்பை உல்ல பகுதியில் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் காயமடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடத்தப்பட்ட இத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்குறுணிப் பிள்ளையாரின் அங்கிகள் திருட்டு-

யாழ். கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தான விக்கிரகத்தின் அங்கிகள் நேற்று இரவு  திருடப்பட்டுள்ளன. மேற்படி ஆலயத்தின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான அங்கிகளை திருடிச் சென்றுள்ளதாக மேற்படி ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை-

உள்ளுராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயிப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ளது. எல்லை மீள் நிர்ணயிப்பு குழுவின் தலைவர் ஜயலத் ரவி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும்போது, புதிய 5000 தொகுதிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவு நோக்கிய பயணத்தில் ஒன்றாக செயற்படுவோம்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

யாழ். வலி.மேற்கு பிரதேச சபையின் கலாசார மண்டபம்  நேற்றுமுன்தினம் (18.10.2013) திறந்து வைக்கப்பட்டது. வலக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து அனறுபகல் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, விருந்தினர்கள் திறப்புவிழா மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, எஸ்..சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீதரன், வட மாகாண  அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் என பெருமளவிலானோரும் கலந்துகொண்டிருந்தனர். சபைக் கட்டடத்தின் முன்னால் அமைக்கப்பட்ட தமிழ்தாய் சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. மதத் தலைவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து வடக்கு முதல்வர் மற்றும் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 30 பேரும் ஒன்றாகச் செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காணாமல் போனோர் விபரங்கள் சேகரிப்பு-

காணாமல் போனோரின் விபரங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கும் முகமாக மன்னார் பிஜைகள் குழு வட மாகாண முழுவதிலும் விபரங்களை சேகரித்து வருகிறது. இம்மாதம் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ம் திகதி கிளிநோச்சியிலும், 16ம் திகதி முல்லைத்தீவிலும், 17ம் திகதி வவுனியாவிலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை நேற்றுக்காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம் தலைமையில் நடைபெற்ற குறித்த பதிவுசெய்யும் நிகழ்வில் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.சுனோஸ் சோசை கலந்துகொண்டு விபரங்களை பதிவுசெய்துள்ளார். இதுவரை மன்னார் மாவட்டத்தில் 240 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 2600 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழு உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் கிடைக்கும் வரை போராடவேண்டும்: மாவை எம்.பி-

தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைய வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு கூட்டமைப்பு போராட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த திறப்பு விழா வலி மேற்கு பிரதேசசபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சிறீதரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும் பங்குகொண்டிருந்தனர்.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு-

நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோர்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னரும் தோல்வியடைந்த உறுப்பினர் தேர்தல் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் தங்களுடைய சொத்து விபரங்களை சமர்பிக்கவேண்டும்.

மட்டக்களப்பில் துப்பாக்கிகள், கிளைமோர் மீட்பு-

மட்டக்களப்பில் ரீ.56 ரக துப்பாக்கிகள் 10, எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கி ஒன்று, கிளைமோர் குண்டு ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் பிரிவில் உன்னிச்சை குளத்தின் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இவை நேற்ற படையினரால் மீட்கப்பட்டுள்ளன. படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலையடுத்தே இவை மீட்;கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவில் கிரான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்து கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான் வைரவன் கோயில் வீதியிலுள்ள வீட்டு வளவிலிருந்தே இந்த கிளேமோர் குண்டை ஏறாவூர் பொலிசார் இன்றுகாலை மீட்டுள்ளனர். வீட்டிலுள்ளோர் வளவினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மர்மப் பொருளொன்று தென்படுவதை கண்ட வீட்டார் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே பொலிசார் அதனை மீட்டுள்ளனர். இந்த வெடிபொருட்கள், துப்பாக்கி என்பன புலிகளால் முன்னர் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று பொலீசார் கூறியுள்ளனர்.

இந்திய துணை ஜனாதிபதியின் விஜயத்திலும் நம்பிக்கையின்மை-

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்திய துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்டவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா சார்பாக இந்திய துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி இம்முறை இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர்களின் விபரங்கள் வவுனியாவில் பதிவு-

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தேவையான விபரங்களை பெறும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் திரட்டும் வேலைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பதிவினை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகியவ மாவட்டங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியாவில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது. 1990 தொடக்கம் 2009 வரையான யுத்தத்தின் காரணமாகவும் கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களினுடைய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் காணாமல் போனவர்களது தற்போதைய குடும்பநிலை, எதிர்பார்க்கும் உதவி என பல விபரங்கள் கோரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கை அகதிகளில் வீழ்ச்சி-

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கை அதிககளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கடந்த 14 நாட்களில் அவுஸ்திரேலியாவுக்கு மூன்று படகுகள் வந்துள்ளன. எனினும் அவற்றில் 6 இலங்கையர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தற்போது கிறிஸ்மஸ்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதற்கு போதிய காரணங்கள் எவையும் இல்லை என அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்துக்கு விஜயம் செய்ய வேண்டுமென இளவரசரிடம் கோரிக்கை-

இலங்கை வரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சௌமிய இளைஞர் வேலைத்திட்டத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து இதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளார். 150 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற காலனித்துவ ஆட்சியின் கீழ், மலையகத்தில் தேயிலை தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். அந்த காலப்பகுதியில் அமைக்கப்பட்ட அதே லயன் அறைகளிலேயே தொடர்ந்தும் மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸின் முன்னோர் அமைத்துக் கொடுத்த தோட்டப்பகுதிகளை அவர் நேரில் பார்வையிட வேண்டும் என்று கோரி, எட்டியாந்தொட்டையைச் சேர்ந்த பொதுமக்களின் கையெழுத்து திரட்டை, பாதயாத்திரையாக சென்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்களை இரத்மலானையில் நிறுத்திவைக்க ஏற்பாடு-

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகளிடம் கோரியுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக நடத்;தப்படும் கூட்டம் இன்றையதினமும் நடைபெறவுள்ளது. மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் முகமாக புதிய ஏற்பாடு ஒன்றுக்கு பொதுநலவாய நாடுகள் இணக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிவிவகார கொள்கை குற்றச்சாட்டுகளை பிரிட்டன் நிராகரித்தது

இலங்கை தொடர்பான பிரித்தானிய வெளிவிவகார கொள்கை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, பிரித்தானிய வெளிவிகார திணைக்களம் நிராகரித்துள்ளது. நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார பிரிவு, இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் வெளிநாட்டு கொள்கை தளம்பல் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற போதும், அது குறித்து நடவடிக்கை எடுக்க பிரித்தானியா அச்சம் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இதனை நிராகரித்துள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்களம், இலங்கை தொடர்பான வெளிநாட்டு கொள்கை பலமானதா? இல்லையா? என்பது, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின்போது தெரியவரும் என குறிப்பிட்டுள்ளது.

சி.வி விக்னேஸ்வரன் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்-

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வடக்கு முதல்வராக தெரிவாகியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக அவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாதென அறிவித்தல்-

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிமுதல் 17ஆம் திகதி வரையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடைபெறவுள்ளது. இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது, இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப்பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை இரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதுவரை 39,616 குடும்பங்கள் மீள்குடியமர்வு-

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிவரையான காலப்பகுதயில் 36ஆயிரத்து 616 குடுமப்ங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 26ஆயிரத்து 808பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது, நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், வவுனியா முகாம்களிலும் இருந்தவர்களே இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் 3,598 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 258பேரும், மாந்தை கிழக்கு பிரதேசசெயலர் பிரிவில் 2,701 குடும்பங்களைச் சேர்ந்த 8ஆயிரத்து 620பேரும், ஓட்டுசுட்டான் பிரதேசசெயலர் பரிவில் 5,517 குடும்பங்களைச் சேர்ந்த 17ஆயிரத்து 998பேரும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் 12,668குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 333பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில் 11,796குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 410பேரும், மணலாறு (வெலிஓயா) பிரதேசசெயலர் பிரிவில் 3,336குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 189பேரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்மோகனுக்கு பதிலாக அன்சாரி, குர்ஷித் பங்கேற்பு-

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலத்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிப்பதுடன், அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறுதியுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைமீது கண்டனங்;கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பர் 10ம் திகதி, இலங்கையில் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே பிரதமருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சர் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறுவர் இல்லம் மூடப்பட்டது-

வவுனியா எடஓகஸ்கட பிரதேசத்தில் விஹாரையில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடஓகஸ்கட சுதர்மாராம விஹாரையில் இந்த சிறுவர் இல்லம், விஹாராதிபதியின் பொறுப்பில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவரச தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் இல்லத்தின் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர் ஒருவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்;டிருந்தது. இந்த முறைப்பாட்டை சிறுவர் அதிகாரசபை உறுதிசெய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிகாரசபை, சிறுவர்களை பொறுப்பேற்றுள்ளது.

காணாமற் போனோர் தொடர்பில் 3 தினங்களில் 1,500 பேர் பதிவு-

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக காணாமற் போனோரைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காணாமற்போன 1,500 பேர் பற்றிய விவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கைளைக் குழப்பும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தப் பதிவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் காணமல் போனவரகள் தொடர்பிலான விவரங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றன. Read more

கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர் க.சிவநேசன் (பவன்) ஊடக அறிக்கை-

bawan 2திரு.கந்தையா சிவநேசன் (பவன்) ஆகிய நான் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டேன். இந்தவகையில், நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எனக்கு ஒன்பதாயிரம் (9,000) வரையான விருப்புவாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் என் இதையம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

நான் அந்த மககளுக்கு நிதியையோ, அன்பளிப்புப் பொருட்களையோ வழங்காமல் எமது கட்சியின் கொள்கைகளையும் இன்றைய எமது நிலைப்பாட்டையுமே முன்வைத்திருந்தேன;. அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு தங்கள் பெறுமதிமிக்க வாக்குகளை வழங்கி எனக்கு ஆதரவுகளை அள்ளி வழங்கினார்கள். அந்த மக்கள் கொண்டிருந்த கொள்கைப்பற்றும், உறுதியான நிலைப்பாடும் இதன்மூலம் தெளிவாக்கப்பட்டது. Read more

வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் இன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த சததியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தெரிவான வட மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா, கலாநிதி எஸ்.சிவமோகன் ஆகியோர் வவுனியா சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்திரயப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட மேலும் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்-

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய மேலோர் சபையின் உறுப்பினர் ரோகன் வெளியிட்ட கருத்துக்கு, சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. மன்னிப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைவந்த அவர், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் சீராக இருப்பதாகவும், வடக்கில் இராணுவ பிரசன்னம் கூறப்பட்ட அளவில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கணக்கெடுக்க முடிவு-

யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆட்களுக்கும் சொத்துகளுக்கும் உண்டான சேதங்கள் தொடர்பாக ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது. இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும் என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைங்களின்படி நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. இந்த விசேட கணக்கெடுப்பு 1983இலிருந்து மே 2009இல் யுத்தம் முடிவடைந்த காலத்தினை அடக்கியதாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும். வீட்டிக்கு வரும் கிராம அதிகாரிக்கு சரியான தகவலை வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இக் கணக்கெடுப்புக்கு உதவ வேண்டுமென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேனை வடிவிலான வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு-

பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கியை புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதென்று விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே பேனை வடிவிலான பிஸ்டல் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சம்பூர் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் பணிப்புரை-

திருகோணமலை சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு பணித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த தம்மை தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்பூர்வாசிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளதாகவும், மிகச்சிலரே இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் கூறிய அரசதரப்பு சட்டத்தரணி, அவர்களையும் மீளக் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால், அதனை நிராகரித்த மனுதாரர் தரப்புச் சட்டத்தரணி, சுமார் 200 குடும்பங்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் அதற்கான இடங்கள் அடையாளங்காணப்படவில்லை என்றும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மக்களை குடியமர்த்துவதற்கான இடங்களை அடையாளம் காட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.