கோட்டாபய ராஜபக்சவின் மனு ஒத்திவைப்பு-

gotabaya......பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தான் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த, மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த மனுமீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதிவாதிகளாக புதிய அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டியது அவசியம் என, மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனால் மனுவை ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தன்னைக் கைதுசெய்ய முற்படுவதாக கூறியே கோட்டாபய குறித்த மனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை கோட்டாபயவைக் கைதுசெய்வதைத் தவிரக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.