ஊர்ப் பாடசாலைகளை வளர்த்தெடுக்க பெற்றோரும் முயற்சிக்க வேண்டும்-பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)
யாழ். ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விசேட கல்வி அலகுத் திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பும், பாடசாலையின் அதிபர் திரு. பி.சிறீதரன் அவர்களின் தலைமையில் நேற்று (15.10.2015) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பேரின்பநாயகம் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சிவானந்தராஜா மற்றும் பங்குத்தந்தை வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆசியுரையினை வழங்கினார். தொடர்ந்து பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்காக அவர்களைத் தூர இடங்களுக்குக் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செய்வது உள்ளுர் பாடசாலைகளின் முக்கியத்துவத்தை தடுக்கின்றது. பிள்ளைகளை சிறு வயதிலேயே தூர இடங்களில் கொண்டுபோய் விட்டுவிட்டால் அவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக மாற்றப்படுகின்றது. ஆகவே பெற்றோர்கள் தங்களுடைய ஊர்ப் பாடசாலைகளை வளர்ப்பதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். அதிபர்கள் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றநிலையில் பெற்றோரும் இதில் காட்டுகின்ற அக்கறை பாடசாலைகளை வளர்ப்பது மாத்திரமல்ல இந்த சமூகத்தையும் வளர்ப்பதற்கு உதவும். ஆகவே பெற்றோரும் உள்ளுர்ப் பாடசாலைகளை வளர்ப்பதற்குத் தம்மாலானவற்றைச் செய்யவேண்டும். இதன்மூலம்தான் பிள்ளைகளையும் நல்லபடி பழக்கவும் வளர்க்கவும் முடியும் என்று தெரிவித்தார்.