franceநேற்று நடைபெற்ற பிரான்ஸின் அதிபர் தேர்தலில், மையவாத கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரைன் லெ பென்னை எதிர்கொள்ளவுள்ளதாக, தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது.இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த பிரான்ஸ்வா பியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷhன் லூக் மெலாங்ஷhங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது.

இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் பிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடிப்பதாக அது அமையும்.

வெற்றிக்கு பிறகு ஆதரவாளர்களின் மத்தியில் பேசிய மக்ரோங் அவர்கள் ஒரு வருடத்தில் பிரான்ஸின் அரசியலை மாற்றியுள்ளதாகவும், மக்கள் அனைவரும் தேசியவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அதிபர் ஒல்லாந்தின் பொருளாதார அமைச்சர் பதவியை விடுத்து புதுக் கட்சியை தொடங்கினார். இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. இவர் வெற்றி பெற்றால் நாட்டின் இளம் வயது அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

ஐரோப்பாவிற்கு ஆதரவான கொள்கையை கடைபிடிக்கும் இவர், பிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும், பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொது முதலீட்டு திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ளார்.

‘தன்னை மக்களின் வேட்பாளர்’ என்று கூறிய லெ பென் பிரான்ஸின் நிலை மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும்’ தெரிவித்தார். அதற்கான முதல்படி எடுக்கப்பட்டுவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்புமிக்கவை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்கள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும், தேசியவாத முன்னணி கட்சியின் தலைவர் மரைன் லெ பென். தனது கட்சியின் தொனியை சற்று மென்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு 2015 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய தேர்தலில் வெற்றிகளை பெற்று தந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரான்ஸின் உறவை மாற்றி அமைக்க நினைக்கும் லெ பென், ஒன்றியத்திலிருந்து வெளியேற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.

குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மற்றும் ‘கடும் போக்கு’ மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்