தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

29ஆவது வீரமக்கள் தினத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றுகாலை (13.07.2018) வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி கட்சியின் உப தலைவர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு நகரசபை உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான நா. சேனாதிராசா அவர்கள் ஒளிச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்ததுடன் நினைவுபேருரையும் ஆற்றினார்.

நிகழ்வில் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்காளன ஜெகதீஸ்வரன், குகதாசன் வவுனியா நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, சு. காண்டிபன், தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான யோகன், நந்தன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கதலைவர் ரவீந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.