யாழ். ஊர்வாற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இன்றுகாலை இடம்பெற்றது.

கல்லூரி வளாகத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளா சதீசன் தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.
ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்த்தன, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலுவதுவெல, திருமதி அலுவெதுவல, அமைச்சின் செயலாளர் திருமதி கொடகந்த, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஜெயசேகரம், யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், நலன்விரும்பிகள், சமயப் பெரியார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.

விருந்தினர்கள், அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரின் உரைகளைத் தொடர்ந்து விழா மேடையில் வைத்து பயனாளிகள் பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதன்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள், தையல் இயந்திரங்கள், சக்கர நாற்கலிகள், கற்றல் உபகரணங்கள், உதவித் தொகைகள், வீட்டு உபகரணங்கள், தொழில் உபகரணங்கள், தொழில் ஊக்குவிப்பு உதவித் தொகைகள், கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு, விளையாட்டு உபகரணங்கள் என பல உதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மூன்று பதிவுத் திருமணங்கள் இடம்பெற்று அவர்களுக்கான திருமணச் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன் சகல திணைக்களங்களும் ஒரு குடையின்கீழ் இணைந்து பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ்கள் வாகன அனுமதிப்பத்திரம் என பல சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார்கள். இதில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.