2018ஆம் ஆண்டில் போலி மரணச் சான்றிதழ் தயாரித்த முல்லிகைத்தீவு கிராம சேவகர், மரண விசாரணை அதிகாரி உட்பட மூவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில், முல்லைத்தீவு நீதவான் எஸ் லெனின்குமார், விடுவித்துள்ளார். அத்துடன், வழக்கு விசாரணை, நவம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு – மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வருகின்றார். அவர் அங்கு தனக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது பெற்றோர் போர் காலத்தில் உயிரிழந்துள்ளதாக, தனது சகோதரி ஊடாக 2018ஆம் ஆண்டில் போலியான மரணச் சான்றிதழ்களை தயாரித்துள்ளார். குறித்த யுவதியின் தந்தை 2014ஆம் ஆண்டில், நோய் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது தாய் தற்போதும் உயிர் வாழ்ந்து வருகின்றார்.

இது தொடர்பில், முல்லைத்தீவு விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, 2018ஆம் ஆண்டில் மல்லிகைத்தீவு கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றிய கிராம சேவையாளர், மரண விசாரணை அதிகாரி, பிரான்ஸில் உள்ளவரின் சகோதரி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.