அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியமென அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு மற்றும் அனில் காரியவசம் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணியளவில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கெதிராக இதுவரை 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.