இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் சுஜியாமா அக்கீரா, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு, நல்லெண்ண விஜயமொன்றை, இன்று (28) மேற்கொண்டு, நூலகத்துக்கு நூற் தொகுதியைக் கையளித்தார். நிப்பொன் பவுண்டேஷன் அமைப்பால் ‘சமகால ஜப்பானை அறிந்து கொள்ள நூறு ஜப்பானிய புத்தகங்களை வாசியுங்கள்’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமிடம் ஒரு தொகுதி புத்தகங்களை தூதுவர் சுஜியாமா அக்கீரா கையளித்தார்.

இந்த நூற் தொகுதியில் அரசியல், சர்வதேச உறவுகள், வர்த்தகம், பொருளாதாரம், இலக்கியம், கலை மற்றும் சரித்திரம் தொடர்பான புத்தகங்கள் அடங்கியுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

இந் நூற் தொகுதியானது பல்கலைக்கழக நூலகத்தினது நூற்சேற்கையானது மேலும் சிறப்படைவதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் ஜப்பான் நாடு தொடர்பான சிறந்த நல்லெண்ண புரிந்துணர்வை இலங்கைக்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் ஏற்படுத்துமெனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.