தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை(11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் இடம்பெறும் விதம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக எதிர்வரும் சில தினங்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் செல்லுபடியற்றதாக்குமாறு ரீட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இடையீட்டு மனுதாரராக கண்காணிப்பு அமைப்பு முன்னிலையாகவுள்ளதாக Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.