முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூலன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூலன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து, சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்றும் செம்மலை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பத்தினை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஒன்று திரண்ட பிரதேச மக்கள் அம்பியூலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அம்பியூலன்ஸின் சாரதி வண்டியினை விட்டு தப்பி சென்றுள்ளார் எனவும் பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அம்பியூலன்ஸின் சாரதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் செம்மலை பிரதேசத்தினை சேர்ந்த 53 வயதுடைய கந்தையா புவனேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.