யாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இணைக்க நடவடிக்கை-

railயாழ் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளுக்கு, மேலதிக ரயில்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள ஆசனத் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் யாழ். தேவி, கடுகதி, குளிரூட்டப்பட்ட கடுகதி, தபால் ரயில் சேவைகள்மூலம் அதிக பயணிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கு அதிகமான பயணிகள் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்வதால், ஆசனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கமையவே, மேலதிக ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு-

16 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். குருநகர் தொடர்மாடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ஜீவன் (வயது 16 ) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 24 ஆம் திகதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. கடந்த 3 தினங்களாக உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில் இளைஞர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபை காணி தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு-

northern_provincial_council1காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தினை உள்ளடக்கி வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் எழுதிய கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தமது அலுவலகத்தில் கிடைகப்பெற்றுள்ளதாகவும் அதனை கூடுமான விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் ஜானதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு-

ilankai india meenavar pechchuயாழ். சிறையில் 24 இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தம்மை விடுவிக்க கோரி நேற்றுக்காலை முதல் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று மீனவர்களுடன் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களின் விடுதலை தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுத்தருவதாக தாம் இந்திய மீனவர்களுக்கு உறுதி வழங்கியதாக துணைத்தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.

இலங்கை திரும்ப விருப்பமில்லை -இலங்கை அகதிகள்-

ilankai thirumpa viruppamillaiஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 67 வீதத்தினர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது டிஐஎஸ்எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவில் தங்கியுள்ள 520 குடும்பங்களில் 23வீதத்தினர் மாத்திரமே இலங்கைக்கு செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளனர் இவர்களில் 48.2 வீதமானோர் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை செல்லவே விரும்புகின்றனர். இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர் மீதமுள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.

தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அலுவலர் காயம்-

உப காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காலி – நெலுவ காவல்நிலையத்தில் பணியாற்றும் பிறிதொரு காவல்துறை அலுவலர் காயமடைந்துள்ளார். காவல்துறையினரின் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை பின்தொடர்ந்து சென்ற காவல்துறை குழுவினர் அதன் சாரதியை கைது செய்தனர் இதன்போது, முச்சக்கரவண்டி சாரதிக்கும், காவல்துறை உப அத்தியட்சகருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உப பரிசோதகரின் உத்தியோகபூர்வ துப்பாக்கி வெடித்ததன் காரணமாக அவருடன் சென்றிருந்த பிறிதொரு அலுவலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அலுவலர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கனடாவில் மூன்று தமிழர்கள் தேர்தலில் வெற்றி-

canada vil moontru tamils vetriகனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி ரொறொன்ரோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் கொந்தளிப்பான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி-

british il ilankai tamil deadபிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடி துறைக்கான ஐரோப்பிய ஒன்றிய பரிந்துரைகள் பூர்த்தி செய்யப்படும்-

நாட்டின் மீன்பிடி துறைக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில், இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெளிவூட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சிறந்த பதிலை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள பரிந்துரைகளில் பிரதான விடயமான படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை நிறுவுவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கான அனுமதி இந்த வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள 8 பரிந்துரைகளுள் இதுவரையில் 5 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 3 பரிந்துரைகளில் இரண்டிற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. படகுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை நிறுவுவதற்கான பரிந்துரை மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைத்தவுடன், குறித்த கட்டமைப்பை நாட்டில் செயற்படுத்த முடியும். அதன் பின்னர் நாட்டின் மீன்பிடி துறைக்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைகள் அனைத்து பூர்த்தி செய்யப்படுவதோடு, அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு-

janathipathi therthalil lankaஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு முழு அளவில் ஆதரவு வழங்க லங்கா சமசமாஜக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பல முக்கியமான அரசியல் தீர்மானங்களை மையப்படுத்தியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சம சமாஜக் கட்சியின் பிரதி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவே இருப்பார் என லங்கா சம சமாஜக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒருவருக்கு ஆதரவளிக்க முடியாது என அந்த கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பாலானவர்கள் தெரிவித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பது தொடர்பிலான யோசனைக்கு ஆதரவாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண உட்பட 23 மத்திய குழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். மாற்று வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு 13 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.