Header image alt text

கொக்குத்தொடுவாயில் 100 பேருக்கு விதைபொருட்கள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு) 

IMG_2220முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள தானிய களஞ்சிய நிலையத்தில் நேற்றுக்காலை 10மணியளவில் 100பேருக்கு உள்ளீடுகைக்கான விதைபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களின் அமைச்சின் ஊடாக இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களது தலைமையில் நடைபெறவிருந்தநிலையில் அவர் இங்கு சமூகமளிக்க முடியாமற்போனமை காரணமாக வட மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உளுந்து பயறு மற்றும் நிலக்கடலை என்பவற்றுக்கான விதைபொருட்கள் 100 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டன.
Read more

கராத்தே சம்பியன் கொலை தொடர்பில் சந்தேகநபரின் சகோதரன் கைது-

444 (2)அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை, தொடர்பில் பிரதான சந்தேகநபரின் சகோதரரை தங்காலையில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்;. சிலருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்தமை என்பன தொடர்பில் இதுவரையிலும் 22பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐகதான இருவரை தவிர, ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான அநுராதபுரம் அஹயியாகமவைச் சேர்ந்த ஆர்.ஏ.இனோன் ரணசிங்க என்பவரை வெளிநாட்டுக்கு செல்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்றும் அவரது கடவுச்சீட்டை முடக்குமாறும் அநுராதபுரம் பிரதான நீதவான் ஷாந்த கலன்சூரிய, குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகிக்கு வியாழக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்தார். பிரபல்யமான இந்த இரவு விடுதிக்குள் 24ஆம் திகதி இரவு 11.45க்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களால் அதன் உரிமையாளரான கராத்தே சம்பியன் வசந்த சொய்சா பலியானார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 22பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

வட்டு மத்திய கல்லூரி மாணவி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கௌரவிப்பு-

4வட்டு மத்திய கல்லூரி மாணவியும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க வீராங்கனையுமான செல்வி. மகேந்திரன் கமலினி தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார். மேற்படி வீராங்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 26.10.2015 அன்று வட்டு இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் சங்க முன்னால் தலைவரும் அராலி சரஸ்வதி மாகா வித்தியாலய அதிபருமாகிய திரு. நா.சபாரட்ணசிங்கி தவைமையில் நடைபெற்றது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் கோலூன்றி பாய்தலில் கலந்து கொண்டு 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டதோடு வட்டு மத்திய கல்லூரி வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காகவும் அவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ் வீராங்கனைக்கு பொன்னாடையினை வலிமேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி. ஜங்கரன் நாகரஞ்சினியும் நாடாளமன்ற உறுப்பினர்களான கௌரவ சுமத்திரன் கௌரவ சரவணபவன் ஆகியோர் வெற்றிக்கிண்ணம் வழங்கி கௌரவித்தனர். மேற்படி மாணவி கௌரவிப்பு நிகழ்வில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் ஆகியோரும் வலிமேற்கு பிரதேச சபை முன்னால் தலைவரும் பங்கேற்றிருந்தனர். Read more

பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய கட்டடம் திறந்துவைப்பு-

point pedro police (1)யாழ். பருத்தித்துறையில் 176 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையம், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பொலிஸ் நிலைய கட்டடம் அழிவடைந்த பின்னர் பொலிஸ் நிலையம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது சகல வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கட்டடம் 5 எஸ் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏசுமந்திரன், த. சித்தார்த்தன், ஈ. சரவணபவன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கே.என். டக்ளஸ் தேவானந்தா, பொலிஸ் மா அதிபர் எம்.கே. இலங்ககோன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, மற்றும் அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திலிருந்து விருந்தினர்கள் கண்டிய நடனத்துடன் அழைத்துவரப்பட்டு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்த அமைச்சர், பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார். பொலிஸ் நிலையம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸார் தங்குமிட விடுதி, ஆவண காப்பகம் போன்ற வசதிகளை உள்ளடக்கி இக்கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
Read more

ரஷ்ய விமானம் எகிப்தில் விழுந்து நொருங்கியது-

russian flightசெங்கடல் பகுதியிலுள்ள ஷார்ம் எல் ஷெய்க்கிலிருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ் பேர்க்குக்கு சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானமான ஏ 321, எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். 217 பயணிகள் மற்றும் 7 விமனப் பணியாளர்களுடன் சென்ற இந்த விமானம், சைப்பிரஸ் பகுதியில் காணமற்போனதாக அறிவிக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே மேற்கண்ட தகவலை எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் அதிகமானோர் ரஷ்யர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு குறித்த பயணிகள் விமானம் சென்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்துள்ளது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளமை தெரியவந்தது. விபத்து குறித்து மேலும் விபரங்களை சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், அமைச்சரவை குழு ஒன்றை அமைத்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் போராட்டம் நிறைவு-

jalமட்டக்களப்பு சிறையில் உள்ள கைதிகள் சிலர் நேற்றையதினம் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகள் சந்தித்து, குறைகளை கேட்டு நிறைவேற்ற ஒழுங்கு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 கைதிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாழேந்திரன், நீதிபதிகளுடன் பேசி, எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு தரப்புக்கும் இடையில் சந்திப்பை ஏற்படுத்த ஒழுங்கு செய்தார். இதனை அடுத்து அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம், சுமார் 80 குடும்பங்கள் இடம்பெயர்வு-

landslideமண்சரிவு எச்சரிக்கை அபாயம் காரணமாக அம்பேவல வோர்விக் தோட்டத்திலுள்ள சுமார் 80 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வோர்விக் தோட்டத்தில் நிலவும் அபாய நிலைமை காரணமாகவே இந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த பகுதியில் சீரற்ற வானிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வோர்விக் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரீஸில் படகு மூழ்கி குழந்தைகள் உட்பட 22பேர் பலி-

greezeஐரோப்பாவில் தஞ்சம் கோரி கடல் மார்க்கமாக கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதிகளின் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 144 பேர் காப்பாற்றப்பட்டதாக கிரீஸின் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகுமூலம் காலிம்னோஸ் தீவு நோக்கி இவர்கள் பயணித்துள்ளனர். இதேவேளை, ரோட்ஸ் அருகே கடலில் மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் சிலர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். ஆக்கிரமிப்பு பகுதியில் அரச படைகள் முன்னெடுக்கும் கடும் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதன்போது பலர் நடுக்கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் போராட்டம்-

88யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற முன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இன்று யாழ் ஹொகதீன் பள்ளியில் நடைபெற்ற விஷேட தொழுகையினை தொடர்ந்து இவர்கள் கவனீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. .

சுங்க அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்-

customs125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்க அதிகாரிகளான சுஜீவ பராகிரம, ஜகத் குணதிலக்க மற்றும் எம்.டீ.யூ.ஜி.பெரேரா ஆகியோரே இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த 15ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கைப் பெண் தெரிவு-

tamil girl australiaஅவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளார். முதன் முறையாக மோர்லன்ட் நகரில் சமந்தா ரட்ணத்தின் பசுமைக் கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பிறந்த சமந்தா ரட்ணம் 1987 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பா மற்றும் கனடாவில் வசித்து பின்னர் 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.

மட்டக்களப்பு மற்றும் திருமலையில் வெடிபொருட்கள் மீட்பு–

bombமட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக கல்குடாவில் பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை முன்னெடுத்தனர். இதன்போது மர்மப்பொருள் ஒன்று தென்படுவதையடுத்து அருகிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்கினர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து ஆட்லறி 122 மோட்டார் குண்டை கைப்பற்றினர். பின்னர் குண்டு செயழிக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேவேளை, திருகோணமலை – வில்கம் விகார பிரதேசத்தில் பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர். நேற்றுப்பகல் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர். வெடிபொருட்களுடன் சந்தேகநபர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். உயர் வெடி மருந்து 1.5 கிலோ கிராம், டெட்டனேற்றர் 182, டெட்டனேற்றர் வயர் 1820 அடிகள். அமோனியம் நைற்றிஜன் 101 கிலோ என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து விசாரணைக்கு பணிப்பு-

arpattamகொழும்பு வோட் பிளேஸில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின்போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரியோகம் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து பிரதமர் அறிக்கையொன்றை கோரியுள்ளார். இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமைச்சருடன், பிரதமர் நேற்று விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது கைதான 2 பிக்கு மாணவர்கள் உட்பட 39 பேரும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வணிகவியல் பாடநெறிக்கு சமமான அங்கீகாரத்தை தமது பாடநெறிக்கும் வழங்குமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு-

meeriyabeddaபதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. இந்த ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி சமய கிரியைகளில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த மக்களை நினைவு கூறி இன்றுகாலை 7மணியளவில் லிந்துலை சென்றெகுலரஸ் தோட்டத்தில் நினைவஞ்சலி கூட்டமொன்றும் இடம்பெற்றது. அத்துடன் தோட்ட ஆலயத்தில் விஷேட ஆத்மசாந்தி பூசையும் நடைபெற்றது. இறந்தவர்களின் நினைவாக 37 மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு பின்னர் சமய பிராத்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. பூஜையின் பின்னர் மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு பாதிக்கபட்ட மக்களுக்கு மலையக அரசியல்வாதிகள் அரசாங்கம் உடனடியாக வீடுகளை அமைத்து மீள்குடியேற்றத்தினை செய்யுமாறு கோரி பேரணியை நடத்தினர் இதன்போது ஆண்கள் பெண்கள் என 300 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் அத்தோடு மலையக பிரதேசத்தில் பல தோட்டங்களில் இன்னும் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான இடங்களை அதிகாரிகள் இனங்கண்டு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு பிரார்த்தனையில் கலந்துகொண்ட மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்

நேபாள முதல் பெண் அதிபராக பித்யாதேவி பண்டாரி தெரிவு-

nepal presidentநேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட, பித்யாதேவி பண்டாரி அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஒரு மாதத்தில் அதிபருக்கான தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதால் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பித்யாதேவி பண்டாரியும், நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் குல்பகதூர் குருங் என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இதில் பித்யாதேவி பண்டாரி 327 வாக்குகள் பெற்று அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குல்பகதூர் குருங் 214 வாக்குகளைப் பெற்றார். இதனையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கர்டி, நேபாளத்தின் புதிய அதிபராக பித்யாதேவி பண்டாரியைத் தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பித்யாதேவி பண்டாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை உபேக்ஷா சொர்ணமாலியிடம் விசாரணை-

upekshaபாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இன்றுகாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா செர்ணமாலி சென்றுள்ளார். இவர் ஒரு பிரபல நடிகையாவார். இலங்கை கேடரிங் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான வாக்குமுலத்தை பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடகர் பந்துல விஜேவீரவும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவுக்கு நாளை சமூகமளிக்க முடியாதிருப்பதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் அடுத்த மாதம் 20 ஆம் திகதியின் பின்னரே இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தனது சட்டத்தரணி ஊடாக நிசாந்த விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய விசேட குழு இலங்கை வருகிறது-

europ1ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் கிரேஸ் ஆசிர்வாதன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை வரும் அந்த குழுவினர் 5 நாட்;கள் நாட்டில் தங்கியிருந்து, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கத்தின் பொருட்டு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளனர். பின்னர் அவர்கள் ஐரோப்பிய சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள், பிக்குகள் உள்ளிட்ட 39 மாணவர்கள் கைது-

dfdfபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் 39 மாணவர்கள் கொழும்பு 04, பம்பலப்பிட்டி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் இரண்டு பிக்கு மாணவர்களும் மாணவிகள் ஐவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட்டு கிழக்கு சித்தன்கேணியில் பா.உ சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)

P1090438யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள வட்டு கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் அழைப்பின்பேரில் அண்மையில் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்பகுதி மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அதேவேளை மக்களது அத்தியாவசிய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்துள்ளார்.

Read more

தமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

vinaதமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி, துணைத் தலைவர்களில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி சி,வி.விவேகானந்தன், ந.ச.ச.க கட்சியின் வி.திருநாவுக்கரசு, சட்டத்தரணிகள், ரத்னவேல், காண்டீபன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளதாக, துணைத்தலைவர் மு.தம்பிராசா ஊடக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் டாக்டர் நல்லையா குமரகுருபரன் தொடர்ந்தும் பணியாற்றுவார் என்றும், இன்னும் பல முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பணிக்குழு பற்றி அடுத்துவரும் செய்திக்குறிப்பில் வெளியாகும் எனவும் துணைத்தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். Read more