நாணயத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்களை அச்சிடும் நிறுவனம் முற்றுகை

gampolaகண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் நேற்று (26) திங்கட்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமான அச்சிடப்பட்ட போலி இரண்டாயிரம் ரூபா தாள்கள் ஆறும், ஆயிரம் ரூபா தாள்கள் 19, மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த நபர்கள் போலி பணத்தாள்களையும், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களையும் மட்டுமன்றி பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், வாகன அனுமதிப் பத்திரச் சான்றிதழ், காப்புறுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதிர்ஷ்ட இலாபச் சீட்டு குலுக்கலின்போது தெரிவுசெய்யப்படும் வெற்றி இலக்கத்தை அடுத்தநாள் அச்சிட்டு அதனூடாக வஞ்சகமான முறையில் மக்களை ஏமாற்றி 10 ஆயிரம் ரூபா வரை சந்தேக நபர்கள் பணம் பெற்றிருப்பதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட அச்சு இயந்திரங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.