தெற்காசிய புலம்பெயர் மாநாட்டில் பிரதமர் விஷேட உரை-

ranilமூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டு விஷேட உரையாற்ற உள்ளார். மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றவுள்ளார். அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தெற்காசியாவில் சட்டம் மற்றும் அமைதி எனும் தலைப்பில் இம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதி அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக புத்தளத்தில் பேரணி-

wewewபோதைப்பொருள் பாவனைக்கு எதிராக புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடப்பு மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயங்களின் மாணவர்களால் இன்றுகாலை 8.00 மணியளவில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்களால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு பேரணியில், பாடசாலை மாணவர்களுடன் பெற்றோர்கள், பாடசாலைகளின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், கிராம மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலான பிரதேச மக்களும் பங்கேற்றிருந்தனர்.

இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்-

wereஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியான முனைப்புகளை மேற்கொள்ளும். அந்த வகையில் இவ்வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த தேர்தலை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஜனாதிபதியும் பிரதமரும் விரைவான தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவே குறித்த விடயத்தை பூதாகரமாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புற கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில பிணையில் விடுதலை-

udaya gammanvilaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 5 இலட்சம் ரூபாவான மூன்று சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டிலேயே உதய கம்மன்பில கைது செய்யப்பட்டிருந்தார்.

பாலித்த தெவரப்பெருமவிற்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோரும்-

protestபிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, 10 மாணவர்களை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த பாடசாலையின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெறவில்லை. இன்றுகாலை மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையின் முன்னால் கூடிய ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிரதி அமைச்சரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக்களை வெளியிட்டனர். எவ்வாறாயினும் கடந்த தினங்களில் பிரதி அமைச்சர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், குறித்த 10 மாணவர்களையும் அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொண்டதன் பின்னரே நிறைவுக்கு வந்தது. இது தவிர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.