sfdfdநீதிமன்ற உத்தரவையும் மீறி, ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 23 பேரையும், விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இவர்கள், நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது, இவர்களில் 21 பேரை, நாளை 9ஆம் திகதி வரையும் ஏனைய இருவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். தெற்கு கைத்தொழில் வலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக, பொலிஸார், கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது, பொலிஸார் உள்ளிட்ட சுமார் 21பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததோடு சம்பவத்துடன் தொடர்புடைய 52 பேர், கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேநேரம் ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா. வீதியில் டயர்களை எரித்தமை, வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.