trinco harbourஇந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற “ரைசினா கலந்துரையாடல் 2017” மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க முடியும் என்று நாம் நம்புகிறோம். இதுதொடர்பாக இந்தியா- இலங்கை இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்காசியாவின் ஆழமான துறைமுகமான திருகோணமலையை, இந்தியா அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் எமக்கு பாரிய கடன்சுமை ஏற்பட்டது. அதனால் தான் சீன நிறுவனத்திடமே அதனை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தனியே வர்த்தக நோக்கிலான திட்டம் மாத்திரமேயாகும்.

இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. இந்தியாவின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியா இதனையிட்டு கவலை கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், திருகோணமலை துறைமுகத்தை இந்தியா மூலம் அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. திருகோணமலை துறைமுகத்தை கடற்படைத் தளமாகவும், வர்த்தக தளமாகவும் மாற்றுவதற்கு நாம் முயற்சிக்கிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.