ananthiயாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விரைவான விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி, நாளை ஒரு மணிநேர கதவடைப்பை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபிக்கின்றன. அரச இயந்திரம், இவ்வாறான குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காமையே, இக் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன.அத்துடன், பொலிஸாரும் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. தமிழ் சமூகம் என்றுமே எதிர்கொண்டிராத சமூகவிரோத குற்றச் செயல்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னரான காலத்தில் எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாளை காலை 9 தொடக்கம் 10 வரையான ஒரு மணிநேர பணிபுறக்கணிப்பும். கதவடைப்பும் மேற்கொள்ளுமாறு அனைத்து அரச, தனியார் துறைகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.