sfdfdஅம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டு எதிரே வந்த பேரூந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் திருக்கோவில் 3 ஆம் பிரிவு வாகீசா வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் கள்ளியந்தீவு பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் 3 பேர் மாலை 4 மணியளவில் சென்றபோது கள்ளியம்தீவு வீதி வளைவில் முச்சக்கரவண்டி வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமால் வீதியில் தடம்புரண்டுள்ளது.

இந்நிலையில் அவ்வீதியால் எதிரே வந்த தனியார் பேரூந்தொன்று தடம்புரண்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த மூவரையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றபோது ஒருவர் இடையில் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் இன்றுமாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.