யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் தலை நசியுண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த மற்றைய இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்தனர். கிட்னன் பரராஜசிங்கம் வயது(35) நவரட்ணம் ஜெயந்தன் வயது(35) ஆகிய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பராஜசிங்கத்தின் மனைவி குடும்பத்தில் இடம்பெற்ற பிரச்சினை காரணமாக ஒருவகை நச்சு விதையினை உட்கொண்டுள்ளார்.

மனைவியை அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளார். நோயாளர் காவு வண்டியினை பின் தொடர்ந்து சென்றபோது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த மண் டிப்பர் வாகனத்துடன் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டுள்ளது.

சம்பவ இடத்தில் மனைவியினை பார்க்க சென்ற கணவனான பராஜசிங்கம் என்பவர் டிப்பர் சில்லினுள் தலை நசியுண்டு உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையினை அச்சுவேலி போக்குவரத்து காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.