காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். பலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.

அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர். போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பலஸ்தீனர்களின் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த 1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பலஸ்தீனர்களின் நிலத்தை பறிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பலஸ்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30ம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெற்றது.