இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிராக 06 வாக்குகள் கிடைத்துள்ளன.
எவ்வாறாயினும் இந்தக் கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக கூறியிருந்தார். இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குடேரஸ் நேற்று வரவேற்றுள்ளார்.
இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை ஜப்பான் வரவேற்றுள்ளது. சட்டத்தின் பிரகாரம் உரிய முறைகள் ஊடாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட அரசியல் ஸ்திரத்தன்மை நோக்கிய நடவடிக்கைகளை வரவேற்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.