பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிகபடியான ஏதிலிகள் உள்வாங்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியாவைத் தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் வழக்கை விசாரணை செய்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சகாய பாதுகாப்பு பெற முடியும் என்று அறிவித்திருந்தது. இதன்படி இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏதிலி விண்ணப்பதாரிகளுக்கு, அங்கு ஏதிலி அந்தஸ்த்து பெற வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக, ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள 70க்கும் அதிகமான தமிழ் ஆண்கள் அண்மையில் சர்வதேச ஆய்வு ஒன்றில் சாட்சியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தது.