வவுனியா – பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – நெடுங்கேணி – பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி 8 வயதுடைய திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் கனகராயன்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுமாலை தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. சிறுவனின் தந்தையை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்த முகவர் கதைப்பதாகவும், 35லட்சம் ரூபாய் தந்தால் சிறுவனை மீள ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தநிலையில், இன்றுகாலை சிறுவனை அப்பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைகளுக்கு அமைய சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் அவரின் சிறிய தந்தை ஆகியோர் தொடர்புபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, தாயாரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.