கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு டெங்கு நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொது மக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர். டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாது தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010ஆம் ஆண்டிலேயே முதலாவது டெங்கு நோயாளி இனங்காணப்பட்டார். அதிலிருந்து ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் இவ் வருடத்தில் கடந்த மாதமே டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையானது முன்னெப்போதும் இல்லாத அளவில் சடுதியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும் மாவட்ட மட்டத்தில் அது குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புச் செயற்பாடுகள் போதுமானளவு முன்னெடுக்கப்படாத நிலையில் இம்மாதம் டெங்குப் பரம்பல் மேலும் அதிகரித்து கார்த்திகை மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 35 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.