Header image alt text

2015 ஜனவரி முதல் இரட்டை பிரஜாவுரிமை-ஜனாதிபதி-

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தது. அதேபோல், இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தையும் நிறுவப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளர் இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பிடமும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை-

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பாதுகாப்பு படையினரிடமும் விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு இதுவரை 19ஆயிரத்து 471 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதில் 5000 முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பினராலும், 14ஆயிரத்து 471 முறைப்பாடுகள் பொதுமக்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமர்வுகளை நடத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்-

ஊவா மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினர்கள் இருவரும் இன்றையதினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்தில் 14,161 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட சமந்த வித்தியாரத்ன மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 5,785 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட ஆர்.எம்.ஜயவர்த்தன ஆகியோர் ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதேவேளை, ஊவா தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாளை சத்தியபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரினால் கைது-

thiyagarajah thuvarageswaranமறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராஜா துவாரகேஸ்வரன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து நேற்று இரவு யாழ். பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்டபோது, ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களுக்கு 300 மில்லியன் இழப்பீடு-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்கவென அரசாங்கம் இவ்வருடம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின்போது கை,கால்கள் இழந்த மற்றும் வீடு, சொத்துக்களை இழந்த பொது மக்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறியுள்ளது. இதன் ஒரு கட்டமாக வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி கிளிநொச்சி-இரனைமடு பகுதியில் இழப்பீடு வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு 130 மில்லியன் இழப்பீடு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் சஜித் பிரேமதாஸவே அடுத்த பிரதமர்-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சில எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கட்சிகளுடன் ஐதேக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஐதேகவின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். எதிர்வரும் வாரங்களிலும் ஐதேக வேறு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவே பிரதமர் என ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் தொகுதி கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார். சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை தான் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

கோபியின் மனைவி, நாட்டைவிட்டு வெளியேற தடை-

புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் பதவிய காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு நேற்று செல்லவிருந்தார். சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான விஸாவை அவர் வைத்திருந்தபோதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நோனிஸின் வெற்றிடத்துக்கு தல்பாஹேவா-

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர்; கிறிஸ் நோனிஸ் இராஜினாமா செய்து கொண்டதையடுத்து அவரது வெற்றிடத்துக்கு மாலைதீவின் உதவி உயர்ஸ்தானிகர் சானக்க எச் தல்பாஹேவா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கிறிஸ் நோனிஸின் இராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்தே பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் நிர்வாகக் கடமைகளை பொறுப்பேற்குமாறு தல்பாஹேவா, வெளிவிவகார அமைச்சினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அமெரிக்காவில் வைத்து தன்ரைன தாக்கியதாக குற்றஞ்சாட்டியே கிறிஸ் நோனிஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

யாழ். இளைஞன், இறம்பொடையில் மரணம்-

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற இளைஞன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றுகாலை 11.10க்கு இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் இரசாயன ஆய்வுகூட பரிசோதகராக கடமையாற்றும் இவர், யாழ்ப்பாணத்திலுள்ள சிலருடன் இறம்பொடைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். அவருடைய சடலம், கொத்மலை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாதங்களில் 1,500 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்-

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 1,500 போலி பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவிக்கின்றது. போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்த நிறுவனத்தினால் போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இணையத்தளங்கள் தொடர்பாக இந்த வருடம் 1,800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில் அநேகமானவை போலி பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்புபட்டு காணப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் கூறியுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் காரியாலயத்திற்கு நுழைய முற்பட்டவர் கைது-

போலி ஆவணங்களை காண்பித்து பிரதமர் காரியாலயத்திற்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளர். குறித்த நபர் வென்னப்புவ – லுணாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச மரதனில், வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காந்தரூபன் 7ஆம் நிலை-

sarvadesa marathanil vavuniya (1)இன்று (05.10.2014) காலை கொழும்பில் எல்.எஸ்.ஆர் சர்வதேச மரதன் நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் 3000-3500 க்கு மேற்பட்ட உலக நாடுகளின் வீரர்கள் பங்குபற்றிய மேற்படி நிகழ்வில் வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் வீரரும், களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவனுமாகிய கணபதி காந்தரூபன் 7ஆம் நிலையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் இலங்கைக்கு முதல் 10 இடங்களில் 4ஆம் மற்றும் 7ஆம் நிலைகள் கிடைத்தன. இவ் தேசிய வீரனின் வெற்றிகள் தொடர மனதார வாழ்த்துகின்றோம்.

யாழ். தொல்புரம் மத்தி சனசமூக நிலைய வாணிவிழா-

yaal tholpuram maththi sanasamuka nilaiyam (3)yaal tholpuram maththi sanasamuka nilaiyam (1)யாழ். தொல்புரம் மத்தி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற வாணி விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திரும தி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இந்த சனசமூக நிலையம் பல ஆண்டுகாலமாக இவ்வாறான வாணி விழாவை நடாத்தி இவ் ஊர் சிறார்களதும் இளையவர்களதும திறமைகளை வெளிக்கொண்டு வருவதை பலகாலமாக நான் நன்கு அறிவேன். அது மட்டுமல்லாது நாடகங்களை மேடை ஏற்றுவதிலும் இவ் சனசமூக நிலையத்தினரின் பங்களிப்பு போற்றக்கூடிய ஒன்றாகும். இன்று எமது தழிழ் சமூகத்தின் இருப்பையும் உறுதியினையும் வெளிப்படுத்துவது எமது பண்பாடு சார்ந்த அம்சங்களே. இப் பண்பாட்டு அம்சங்களே எமது தேசியத்தின் இருப்பையும் உறுதியினையும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான அம்சமாகும். இந்த நாட்டில் எமது இனம் தமக்கென தனித்துவத்தினை கொண்டிருப்பதற்கான காரணமும் எமது பண்பாடு சார்ந்த அம்சங்கள் என்றே கூற முடியும். தமிழர்கள் எப்படியும் வாழலாம் என்பவர்கள் அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற தனித்துவத்தினை கொண்டவர்கள் நாம். எமது பணபாடு உலகில் தனித்துவம் வாய்ந்த பண்பாடு இந்த பண்பாட்டின் வழிநின்று எமது இனத்தின் வரலாற்றறை உறுதிப்படுத்த வேண்டும். நடைபெற்று முடிந்த யுத்தத்தின்பின் எமது இனத்தின் இருப்பான மூல வேராகிய எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தினையும் சிதறடிப்பதற்காக பல நடவடிக்கைகள் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது. இதன் வாயிலாக பண்மைக் கலாச்சரம் உருவாக்கப்பட்டு எமது தனித்துவத்தினை இல்லாது ஒழிப்பதே அவர்களது முக்கிய நோக்காக உள்ளது., இவ்வாறான பன்மைக் கலாச்சாரம் உருவாகும்போது எமது தனித்ததுவம் இல்லாது போகும் நிலை உருவாகும் இதுவே அவர்களது நீண்டகால நோக்காகும். இத்; தன்மையை எமது சமூகத்தில் ஊடுருவ விடாது தடுத்து எமது பண்பாடடையும் கலாச்சரத்தையும் காப்பது இன்றைய காலப்பகுதியில் உள்ள ஒவ்வைருவரதும் கடமை ஆகும். கடநத கால போராட்ட வரலாற்றில் எமது தனித்துவத்தை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக மண்ணிற்கு விதையானவர்களின் கனவையும் இலட்சியத்தினையும் நிறைவு செய்ய எமது பண்பாட்டின் வழியில் நாம் நடை போடுவது மிக முக்கியமான ஒன்றாகும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் வேண்டாமென இடதுசாரிகள் கோரிக்கை-

அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பதவியில் இருக்க முடியும். அத்தோடு மூன்றில் இரண்டு பலம்கொண்ட அரசாங்கமும் இருக்கிறது. இவ்வாறிருக்கையில் அவசரமாக ஜனாதிபதி தேர்தலொன்றிற்கு செல்லத் தேவையில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. இலங்கை கம்யூனிச கட்சியின் செயலர் சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியபோதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பலம் கொண்ட அரசாங்கமொன்று இருக்கிறது. அத்தோடு இரண்டு வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அந்த 2 வருட காலத்தில் இரு வரவு – செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்க முடியும். எனவே அதனூடாக மக்களுக்கு நல்ல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். அதன் பின்னர் தேர்தலொன்றிற்கு செல்வதே சிறந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

புன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டுப் போட்டி-

யாழ். புன்னாலைக்கட்டுவன் கலைவாணி சனசமூக நிலையமும், கலைவாணி முன்பள்ளி மாணவர் சங்கமும் இணைந்து நடாத்திய கலைவாணி முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி இன்று (04.10.2014) சனிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு எஸ். நேசராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் பங்குகொள்ளாமையால் வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். புன்னாலைக்கட்டுவன் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தியாகராஜா பிரகாஸ், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் திரு வசந்தகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் சார்பில் அவரது செய்தியினை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு லோகன் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாலை 6மணியளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

20141004_16564620141004_17034020141004_17084820141004_17223820141004_17213220141004_160055

13ஆம் திகதி முதல் யாழ். வரையான தொடருந்து சேவை-

வடக்குக்கான தொடரூந்து சேவையின் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான சேவைகள் இந்த மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் முகாமைத்துவ அதிகாரி பீ.எச்.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தொடரூந்து பாதை நிர்மாணங்களுக்கு இந்தியா நிதிவழங்கலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையிலான படகு சேவை-

இலங்கைக்குக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான கப்பல்சேவை அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வரும் நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி உதவியின்கீழ், தலைமன்னாருக்கான தொடரூந்து பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகள் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வருடம் முதல் தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்துக்குமான கப்பல் சேவையை ஆரம்பிக்க கூடியதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பௌரூஸுடன் இலங்கை நீதி ஒப்பந்தம்-

இலங்கைக்கும், பௌருஸ்க்கும் இடையிலான சட்ட மற்றும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இணங்கப்பட்டுள்ளது. பௌரூஸின் ஜனாதிபதி எலசாண்டர் லுகசென்கோ இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறார். குற்றச் செயல்கள் தொட்ட தகவல் பரிமாற்றங்களின் பொருட்டு இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடம் இலங்கையுடன் இவ்வாறான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்நுழைவு-

கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9மணிவரை கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் நீர்கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை-அமெரிக்கா-

இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு மென்மைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக்கப்பட்டிருந்தன. எனினும் அவ்வாறான எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் சாகீ தெரிவித்துள்ளார். அதேநேரம், இலங்கையுடனான அமெரிக்காவின் சீரான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எனினும், நிலையான சமாதானத்தையும், மக்களின் நல்வாழ்க்கையையும் இலங்கை உறுதி செய்யும் பட்சத்திலேயே இது சாத்தியப்படும் என்றும் அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் சாகீ குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் முறைபாடுகள் மொழிப்பெயர்ப்பில் பிழைகள்-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும், சாட்சி வழங்கியோருக்கும் இடையில் மொழிப்பெயர்ப்பு பிரச்சினைகள் காணப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் வழங்கிய பல முறைபாடுகள் பிழையாக மொழிப் பெயர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆணைக்குழுவின் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகள் பிழையாக மொழிப்பெயர்க்கப்பட்டு மக்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரிகள், எந்த திசையில் இருந்து எறிகணைகள் வந்தன? என்று கேள்வி எழுப்பியபோது, அந்த கேள்வி எந்த முகாமில் தங்கி இருந்தீர்கள் என்று மொழிப் பெயர்க்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தானியாவில் சந்திப்பு-

பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அங்குள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கிளைக் காரியாலயத்தில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சர்வதேச பொறுப்பாளர் சாகல ரத்னாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் தேசிய தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி முகம் கொடுக்கவுள்ள முறைமைகள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய அரசாங்க மற்றும் எதிர்கட்சி தரப்புக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வான் ஆற்றில் விழுந்ததில் மூவர் மரணம்-

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று ஆற்றில் விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவனெல்லை, உயன்வத்தையைச் சேர்ந்த மொஹமட் யூசுப் இம்தியாஸ் (வயது 45), மொஹமட் பாரூக் (வயது 53), பாத்திமா மிசிரியா (வயது 49) ஆகியோரே மரணமடைந்துள்ளனர். ஹஸீர் மொஹமட் (வயது19) என்பவரே காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள உறவினரின வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதால் விபத்து சம்பவித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கச்சதீவை கோரும் தமிழகத்தின் புதிய முதல்வர்-

கச்சத்தீவு விடயத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் வழியையே, தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். கச்சத்தீவு இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்து – இலங்கை உடன்படிக்கையின் கீழ் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனை மீளப்பெற முடியாது என்று மத்திய அரசாங்கம் முன்னதாகவே அறிவித்திருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது-

வவுனியா – மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று (03) அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – போகஸ்வௌ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்கிரியாகம, மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

ஐ.தே.க உயர்மட்டக் குழு, தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு-

ஐ.தே.கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிலர் இன்றுமுற்பகல் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்ததாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக குறைந்தது 45 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் சர்வதேச கண்காணிப்பாளர்கள் செயற்பட வேண்டுமெனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வத்திக்கானுக்கு விஜயம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வத்திக்கான் செல்கின்றார். வத்திக்கான் பயணமாகும் ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி, அவரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2015 ஜனவரி 13ம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறைமாவட்டம் மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் அடங்குகின்றார். இந்த விஜயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனக்கு அனுமதி அளித்துள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியின் அனுமதியுடன் இதற்கு முன்னரும் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தேகொட இராணுவ முகாமில் வெடிப்பு-

மத்தேகொடை இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இன்றுகாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று மத்தேகொட முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இன்றுகாலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குழுவொன்று ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் தீயணைப்பு வாகனங்களுடன், கோட்டே மற்றும் தெஹிவளை நகர சபைகளின் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக பிரிகேடியர் ருவன் வனிகசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நங்கூரமிட்ட பாக். கடற்படைக் கப்பல்-

பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என்.எ.எஸ்.ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளன. பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் கு22P போர்க்கப்பலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக மேற்படி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடக்கூடியது.

இலங்கை தொடர்பில் மீண்டும் அறிக்கை சமர்ப்பிப்பு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில், இலங்கை தொடர்பான புதிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 40 பக்கங்களைக் கொண்டதான இந்த அறிக்கையில், இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலைமைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச முதியோர் தினம் – 2014

imagesCA5FZJ2Fசர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம் திகதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக சர்வதேச முதியோர் தினம் காணப்படுகின்றது. வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே அக்டோபார் 1ம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு-

jeyalalithavin pinai manuதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உட்பட நால்வரின் பிணை மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறுகோரி நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையை இம்மாதம் 6ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் நேற்றையதினம் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனுவொன்றை கையளித்தனர். இதற்கமைய ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றின் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் அரச தரப்பு சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் மனுமீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் மீளாய்வு-

ilankaiyin manitha urimai nilaimaiஇலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைக் குழு இம்மாதம் 7ம், 8ஆம் திகதிகளில் மீளாய்வு செய்யவுள்ளது. 18 பேர்கொண்ட சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவினரால் இந்த மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையுடன் மேலும் ஐந்து நாடுகளின் மனித உரிமை நிலை தொடர்பிலும் மீளாய்வு செய்வதற்கு ஐ.நா மனித உரிமைக் குழு உத்தேசித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் குழுவினர் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

14 வருடங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை-

meendumயாழ்தேவி ரயில் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது. ஒக்டோபர் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில்சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ். ரயில் நிலையமும் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை எதிர்காலத்தில் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more