நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக நிதிச்சான்று சீட்டு வழங்குவது தொடர்பான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்றுகாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பேரணி-
வவுனியாவில் பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கு எதிராக அமைதிப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்ளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து கிராமிய பெண்கள் அமைப்பினால் இப்பேரணி நடத்தப்பட்டது. வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உரிமைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் வீதி வழியாக வவுனியா பிரதேச செயலகத்தை அடைந்த இப்பேரணியில் ஈடுபட்டோர் வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், கணவனை இழந்த இளம் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவேண்டும்,காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரே இதன்போது கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல் கைதிகள் பதினொரு பேருக்கு பிணை வழங்க மறுப்பு-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அமைய கைதுசெய்யப்பட்ட 11அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பத் தெரிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகள இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர்களை டிசம்பர் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் புலிச் சந்தேகநபர்கள் 11பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து தமக்கு ஆலோசனை கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்ட நீதவான் அவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வானுர்தி விபத்துக்கான காரணத்தை ரஷ்யா ஏற்பு-
224 பேர் பலியாவதற்கு காரணமான, எகிப்திய சினாய் குடாவில் உடைந்து விழ்ந்த ரஷ்ய வானூர்தி விபத்துக்கான காரணம் தீவிரவாதிகளின் தாக்குதலே என்பதை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. வானூர்தி வெடிக்கச் செய்வதற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும், வெளிநாட்டு தயாரிப்பு வெடிப்பொருட்கள் வானூர்தி உடைந்து வீழ்ந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி கண்டுப்பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடின் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ரஷ்ய வானூர்தி தாக்குதல் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்துக்கு காரணமாக கருதப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை தமது நாடு மேற்கொள்ளும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் யோசனைக்கு எதிர்ப்பு-
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலுக்காக அமைக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் யோசனையை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இரண்டாவது தடவையாக நேற்று கூடியபோது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் செயற்படும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன், அரசியலமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.