sdfsdds1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 43ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

43ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.00அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபிகளுக்கும் அங்கு கலந்து கொண்டவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கந்தையா சிவநேசன், விந்தன் கனகரத்தினம், துரைராசா ரவிகரன் உட்பட கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தத்தால் எழுதப்பட்ட தமிழாராய்ச்சி படுகொலைகள் எனும் நூலை சிவாஜிலிங்கம் வெளியிட்டு வைக்க வடமாகண அமைச்சர் ஐங்கரநேசன் பெற்றுக்கொண்டார்.

1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர்.