sasaகாணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியில் 14பேர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமற்போன தங்களின் உறவுகள் தொடர்பில் இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், உண்ணாவிரதத்தை வலுப்படுத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இளைஞர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சிலர் நேற்று சுகவீனமுற்றதோடு, அவர்களை வைத்தியர்கள் பரிசோதித்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏனையோர் இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தை தொடர்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.