kepapulavuமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்தனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் வலியுறுத்தினர். மேலும் இங்கு துயரப்படும் மக்களின் நலன் விசாரிப்பாளர்களாக மாத்திரமே அரசியல்வாதிகள் பிரசன்னமாகிக் கொண்டிருகின்றார்களே தவிர இதுவரை தீர்வினை வழங்க யாரும் முன்வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்மக்கள் குறிப்பிட்டுனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது சொந்த காணிகளிற்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு கலைஞர்கழகம், விளையாட்டுகழகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.