viyalendran (2)மட்டக்களப்பு மாவட்ட வேலை இல்லா பட்டதாரிகள் தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரி தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், மீண்டும் தனிப்பட்ட ரீதியாக ஜனாதிபதி, பிரதமருக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், 31.03.2012ற்கு பிறகு உள்ள கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் 31.03.2012ற்கு பின்னர் 4500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரி 1000 தொடக்கம் 1500 வேலையில்லாத பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சராசரியாக 1300க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 2012ம் ஆண்டிற்குப் பின்னர் கிழக்கு மாகாணசபையினலும், மத்திய அரசினாலும் ஆசிரிய நியமனங்கள், ஏனைய திணைக்கள நியமனங்களும் சில பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 31.03.2012ற்கு பின்னர் வருட அடிப்படையில் பார்க்கும்போது பல வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ந்தும் ஆறு நாட்களாக வேலையில்லா பட்டதாரிகள் மத்திய அரசாங்கத்தினதும், மாகாணசபையினதும் நியமனங்களை வழங்கக்கோரி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இவர்களுக்கு நிரந்தரமாகவோ அல்லது பயிற்சி அடிப்படையிலோ ஆசிரிய நியமனங்களில், ஏனைய திணைக்களங்களில் உள்ள பணி வெற்றிடங்களை நிரப்பி பட்டதாரிகளுக்கான தொழில்வாய்பினை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.