28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் யாழ். சுழிபுரம் வலக்கம்பறை அம்மன் ஆலய மண்டபத்தில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் (13.07.2017) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னைநாள் மேல்நீதிமன்ற நீதிபதி த.விக்னராஜா அவர்களும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு. சி.ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், பிரதேச இணைப்பாளருமான திரு. அ.கௌதமன், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டார்கள்.
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி மற்றும் துடுப்பாட்ட சுற்றுப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற அணிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கட்சியின் முன்னைநாள் அங்கத்தவர்களான திரு, ஆனந்தன், திரு. நாதன் ஆகியோரின் குடும்பங்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வுகளுக்கான அனுசரணையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையும் பங்குபற்றியிருந்ததோடு, மேற்படி இரு துவிச்சக்கர வண்டிகளும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் அனுசரணையில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.