சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிக் கொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கிய நிலையில் விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டன. விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

உடைந்து விழும் விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் இலங்கையில் விழாதெனவும், இது தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இயக்குனர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29 ஆம் திகதி ‘டியான்காங்-1’ விண்வெளி நிலையம் நிறுவப்பட்டது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது. (மாலைமலர்)