முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. 

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது என குற்றம்சாட்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என 3 அம்ச கோரிக்கையினை முன்வைத்து மேற்படி கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பிடபிள்யு சந்தியில் ஆரம்பித்த இப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை அடைந்தது. இதில் மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.