சித்திரவதைகள் தடுப்புக்கான ஐ.நா சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் நேற்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழுவின் இலங்கை விஜயம் ஏப்ரல் முற்பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், பயண விபரம் காலஎல்லை குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், குறித்த விஜயத்தின் கால எல்லை உட்பட ஏனைய விபரங்கள் பயணத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம்பெற்ற உபகுழுவின் உள்ளக உயர்மட்ட கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உப குழுவானது, ஆர்ஜண்டீனா, பலஸ்தீனம், பல்கேறியா, கபோ வார்டே, கானா, செனகல் மற்றும் பிரித்தானிய முதலான நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.