யாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்து வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது.இதில் படுகாயமடைந்த சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.