இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதலாவது தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைதுத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் கடந்த நவம்பர் 19 திகதி வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த பொலிஸாரை கத்தியால் தானே குத்தி கொலை செய்துள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும் கல்முனை – சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று அதிகளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வெடிப்பு பொருட்கள், டெட்டனேற்றர்கள், பறக்கும் ரோன் இயந்திரமும் இதில் அடங்கும் என இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அந்தக் காணொளியும் இந்த பகுதியில் வைத்து படமாக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரிகள் அணிந்திருந்த உடைகளும், பயங்கரவாத இலக்கத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட துணியும் மீட்கப்பட்டுள்ளது.

காணொளியின் பின்பகுதியில் காணப்பட்டதாக கருதப்படும் திரையை ஒத்த திரையொன்று கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் தற்கொலை குண்டுதாரிகளின் பிரதான பகுதியாக இந்த வீடு காணப்பட்டுள்ளது. இதேவேளை பயங்கரவாதிகளின் வீட்டினை அதிரடி படையினர் முற்றுகையிட்ட போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 தற்கொலைதாரிகளின் உடல்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கடும் சமரின் போது காயப்பட்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது இவ்விதமிருக்க பல்வேறு தொடர்பாடல் சாதனங்களும் அதற்கான உபகரணங்கள் தொகையொன்றும் மஸ்கெலியா பிரதேசத்தின் தோட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் காவற்துறை விசேட அதிரடிப்பிரினருடன் இணைந்து காவற்துறை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, வாக்கிடோக்கி கருவிகள் உட்பட பல தொடர்பாடல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.