புதிய பிரதம நீதியராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று முற்பல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
இதன்போது, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக தெரிவு செய்துள்ளது. இதனிடையே, புதிய கணக்காய்வாளர் நாயகமாக மேலதிக கணக்காய்வாளராக செயற்பட்ட சூலந்த விக்ரமரத்னவை நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த ஹேமசிறி பெர்ணான்டோ, நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பதில் பாதுகாப்புச் செயலாளராக, துசித்த வணிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சைனா ஈஸ்டன் விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 4 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை மே மாதம் 1ஆம் திகதி முதல் ரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமான பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அளுத்கம – தர்காநகர் பகுதியில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.