2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகள், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன. அதற்கமைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டிராதவர்களுக்கு இந்த தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.தற்காலிக அடையாள அட்டையானது ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் வாக்களிகத்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று மேலதிக ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது பெருந்தோட்ட தொழிலாளர்களாயின் தோட்ட அதிகாரியிடம் உறுதிச் சான்றிதழை பெற்ற மாவட்ட தோதல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த தற்காலிக அடையாள அட்டை நவம்பர் 9ஆம் திகதி வரை வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.