ereமத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்க கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கடும் வெயிலிலும் பச்சிளங்குழந்தைகளுடன் பட்டதாரி தாய்மாரும் கலந்துகொண்டதுடன் விசேட தேவையுடையவர்களும் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு தமக்கான நியமனங்கள் வழங்குவது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவற்றை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். 2012-03-31ற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ள போதிலும் எந்த ஒரு தீர்வினையும் மத்திய, மாகாண அரசுகள் வழங்காத நிலையில் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளின் திறமைகளை போட்டிப் பரீட்சைகள் மூலம் அறிந்துகொள்ள முடியாது. நேர்முகத்தேர்வின் மூலம் பட்டதாரிகள் நியமனங்கள் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பட்டதாரிகள், நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.