d-sithadthan-m-pயாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

நீதிபதி இளஞ்செழியன் மிக நீண்ட காலமாக எனக்கு நன்கு பரீட்சயமானவர். அவர் வவுனியாவில் இருந்த காலத்தில், அதிஉச்ச யுத்தகாலமாக இருந்தபோதிலும் மிகத் துணிவாகவும், நேர்மையாகவும் தன்னுடைய நீதிச் சேவையினை ஆற்றிவந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

எந்தவிதமான அரசியல் கலப்பும், பக்கச்சார்பும் இன்றி மிகவும் நேர்மையான முறையிலே அவர் செயற்பட்டு வந்திருக்கின்றார். 
யாழ்ப்பாணத்திலே மிகவும் பாரதூரமான, உயிர் அச்சுறுத்தல் மிக்க வழக்குகள் பலவற்றை அவர் நேர்மையாக கையாண்டிருக்கின்றார்.

இத்தகைய துணிவும் நேர்மையுமுள்ள நீதிபதி இளஞ்செழியன், எங்களுடைய பகுதிக்கு இன்று மிக அத்தியாவசியமான நீதியை வழங்குபவராகவும், நீதியைப் பாதுகாப்பவராகவும் பார்க்கப்படுகின்றார்.

இன்று குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகள் அதிகமாக இருக்கின்ற எங்களுடைய பகுதியிலே இப்படியான ஒரு நேர்மையான, பக்கச்சார்பற்ற ஒரு நீதிபதியின் சேவை மிகவும் அவசியமாகும்.

இப்படியான குற்றச்செயல்கள் தொடராமல் பார்ப்பது பாதுகாப்புத் தரப்பினருடைய கடமையாகும். இதை அவர்கள் செவ்வனே செய்யவேண்டுமென்று நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

இவர்மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்தில் கொலையுண்ட சார்ஜண்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.