அன்பார்ந்த தமிழ் மக்களே!

சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில்,  தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி(?) அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு,

பறவைகள் சரணாலயம் என்கின்ற செயற்திட்டங்களின் பேரால் அங்கு வாழ்ந்த, வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாக உள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின்  குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. முல்லைத்தீவின் தெற்கு வலயத்தில் எட்டுச் சிங்கள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தின் சட்டங்களை எல்லாம் மீறி காணி வழங்கிய விடயம் தனக்கு தெரியாது என்றும் அதைத் தடுத்து நிறுத்துவேன் என்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறிய பின்பும், தனது காணி வழங்கல் நடவடிக்கையினை நியாயப்படுத்தி வருகின்றது ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள மகாவலி அதிகாரசபை.

இனத்துக்கு இனம், இடத்துக்கு இடம் மாறி மாறி கருத்துரைத்து, வாக்குறுதிகளை வழங்கிவருகின்ற இன்னுமொரு சராசரி அரசியல்வாதியாகவே தமிழ்மக்கள் ஜனாதிபதியையும் நோக்குகின்ற வழக்கமான, மரத்துப்போன மனநிலைக்கு வந்துள்ளனர். 

இவை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒழுங்குகளா? அல்லது ஜனாதிபதியின் நிலைப்பாடுகளையும் மீறிய பேரினவாத சக்திகளின் செயல்பாடா? என்பதை நாம் இனம்காண வேண்டியுள்ளது. 

தெற்கில் ஆட்சியதிகாரத்திற்கு வரும் எந்த சிங்கள அரசியல் தலைவரும் பௌத்த, சிங்கள மேலாதிக்க சக்திகளின் எண்ணங்களை புறந்தள்ளி செயற்பட ஒருபோதும் துணிந்ததில்லை. மீறி செயற்பட்டாலும்கூட அதனை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதற்கு அந்த சக்திகள் தயங்கியதுமில்லை.

தமிழ்பேசும் மக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தை ஊடறுப்பது, சுருக்குவது போன்ற நோக்கங்களுடன் செயற்பட்டு,  சொந்த பிரதேசங்களிலேயே தமிழர்களை சிறுபான்மையாக்கும் செயற்பாட்டை வரலாற்றுக் கடமையாக எண்ணி இயங்குகின்ற சிங்கள, பௌத்த அரசு இயந்திரம், யுத்தம் இல்லாத காலத்திலேயே அதிகளவு வேகத்துடன் இயங்கிவருகிறது. அதன்மூலம் அரசு இயந்திரம் தனது இலக்கினை அடையும் தூரம் மிக மிக குறைந்து வருகிறது. 

எனவே மதம், கட்சி, வர்க்கம் என்ற பேதங்களை கடந்து ஓரணியாக செயற்படுவது அவசியம் என்பதே எமது முதன்மையான வேண்டுகோளாகும்.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டங்களையெல்லாம் மேவிய அதிகாரத்தை கொடுத்து வைத்துள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில், நீரைக் கொண்டுவர முடியாத இடங்களையெல்லாம் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதையும், அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதையுமே தனது பிரதான செயற்பாடாக கொண்டு காலகாலமாக இயங்கி வருகிறது.

இதனை தெளிவாக தெரிந்துகொண்டும்கூட  நல்லாட்சியின் ஜனாதிபதி உள்ளிட்ட கடந்தகாலத்தில் அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் அதற்கான அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குவதற்கு என்றும் தயங்கியதில்லை. 

எனவே எமது நிலங்களை, எமது வாழ்வாதாரங்களை, எமது களப்புகளையும், ஏரிகளையும், கரையோரங்களையும் நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பேசுவதாலும், எழுதுவதாலும் புரியவைக்க முடியாத ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், ஒத்துழையாச் செயற்பாடுகளையும் ஜனநாயக செயற்பாடுகள் மூலம் முன்னெடுப்பதே எமக்குள்ள ஒரே தெரிவாகியுள்ளது.

மண்ணையும் மொழியையும் நேசிக்கும் உணர்வாளர்களே, எதிர்வரும் 28.08.2018 அன்று முல்லைத்தீவு PWD வீதியிலிருந்து மாவட்ட செயலகம் வரை ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்ற விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் அணிதிரள்வோம், எமது மக்களுக்கெதிரான அநீதியை அம்பலப்படுத்துவோம். நில அபகரிப்பை தடுத்திடுவோம். வாழ்வையும், வளத்தையும் எமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் காத்திடுவோம்.

க.சிவநேசன்

விவசாய அமைச்சர்

வட மாகாணசபை

26.08.2018.