இலங்கையில் உருவாகியுள்ள முன்னொருபோதும் இல்லாதநிலை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் எல்டெர்ஸ் அமைப்பு இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் மிக மதிக்கப்படும் மூத்த அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியதே எல்டெர்ஸ் அமைப்பு. தென்னாபிரிக்காவின் முன்ளாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இந்த அமைப்பை ஆரம்பித்திருந்தார். இலங்கையின் அரசியல் தலைவர்களை சட்டத்தினை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள எல்டெர்ஸ் அமைப்பு மனித உரிமைகள் ஜனநாயகக் கொள்கைகளிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.இலங்கையில் அரசியல் பதற்றநிலையை அதிகரிக்கும் மேலும் வன்முறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் எல்டெர்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை முன்னொருபோதும் இல்லாத அரசமைப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இதற்கு உடனடியாக அமைதியான வழிமுறைகள் மற்றும் சட்டரீதியில் தீர்வை காணவேண்டும் என நோர்வேயின் முன்னாள் பிரதமரும் எல்டெர்ஸ் அமைப்பின் பதில் தலைவருமான குரொ ஹர்லெம் பிரென்ட்லான்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பல வருட உள்நாட்டு மோதல்கள், மனித உரிமைகளால் பெருந்துயரத்தை அனுபவித்துள்ளது. இதன் காரணமாக அரசியல் காய்நகர்த்தல்கள் ஆபத்தை சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவை ஜனநாயகத்தையும் அரசமைப்பு விழுமியங்களையும் மதிப்பதன் மூலம் அனைத்து மக்களினதும் நலனிற்காகவும் செயற்படுமாறு வலியுறுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதன் காரணமாக தசாப்தகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை முன்னெடுத்துள்ள பலவீனமான நல்லிணக்க மற்றும் மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் எனவும் எல்டெர்ஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச தலைவரே அரசமைப்பை மீறினால் அரச ஸ்தாபனங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படலாம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.